செய்திகள்
கோப்பு படம்.

பல்லடம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய வியாபாரி

Published On 2021-01-14 02:29 GMT   |   Update On 2021-01-14 02:29 GMT
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பல்லடம்:

பல்லடம் அருகே குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் மாகாளியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் கவுரிசங்கர (வயது 36). இவரது மனைவி பானுப்பிரியா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவுரிசங்கர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் சமாதானம் செய்தும், இருவருக்கும் இடையே பிரச்சினை தீரவில்லை.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவுரிசங்கர் தனது மனைவியை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி விட்டார். அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர், பானுப்பிரியாவை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மனைவியை கோபத்தில் கத்தியால் குத்தி விட்டோமே என மனமுடைந்த கவுரிசங்கர் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவருக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News