செய்திகள்
சங்கரய்யா

சங்கரய்யாவுக்கு ‘தகைசால்’ தமிழர் விருது- சுதந்திரதின விழாவில் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

Published On 2021-07-28 08:25 GMT   |   Update On 2021-07-28 09:14 GMT
“தகைசால் தமிழர்” விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான “தகைசால் தமிழர்” விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு, ரூ.10 லட்சம் காசோலையும், பாராட்டு சான்றிதழும், வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News