தொழில்நுட்பம்
ஏப்ரல் 21-ல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி S8?
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் இதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை பார்ப்போம்.
சியோல்:
சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படும் கேலக்ஸி S8 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் போன் குறித்து வெளியாகும் தகவல்கள் இந்த ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இதன் மெமரி அளவு, அக்சஸரீ மற்றும் இதர தகவல்கள் தற்போது அம்பலமாகியிருக்கிறது.
அதன் படி தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி S8 இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. இரண்டு மாடல்களிலும் டூயல்-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் மற்றும் 6.2 இன்ச் திரை வழங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கேலக்ஸி S8 டிஸ்ப்ளே அளவு முந்தைய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டதை விட பெரியதாக இருக்கும் என்றும் முன்பக்கம் சாம்சங் லோகோவிற்கே இடம் இருக்காது எனவும் கூறப்படுகின்றது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் போனின் பின்புறம் வழங்கப்படலாம் என்றும் டூயல் பிக்சல் கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன் 64ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. வழக்கமான 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதி மற்றும் பல்வேறு இதர அக்சஸரீகள் வழங்கப்படும் என்றும் இவற்றை கொண்டு சிறிய ஆண்ட்ராய்டு கணினியாக மாற்றும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் புதுவித சாம்சங் கியர் விர்ச்சுல் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் கியர் 360 கேமரா உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கும் என்றும் மார்ச் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.