ஆன்மிகம்
தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி)

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம்

Published On 2021-03-17 06:32 GMT   |   Update On 2021-03-17 06:32 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 22-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்துக்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கென நேற்று அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தனுர் லக்னத்தில் அதிகாலை 2.30 மணியளவில் பிரியாவிடையுடன் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் எழுந்தருளிய சிறிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நிலையில் சேர்த்தனர். பின்னர் காலை 8.05 மணிக்கு சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் காலை 9.20 மணிக்கு மேல் உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

அம்மன் தேர் மதியம் 2 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் மதியம் 2.15 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் மதியம் 3.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தின் போது மேளதாளம், சங்குநாதம், அதிர்வேட்டுகள் முழங்க “சிவ...சிவ...”, “ஓம் சக்தி” என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தலைமையிலான கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News