செய்திகள்
இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாமல் தவிக்கும் திருப்பூர் தொழிலாளர்கள்
திருப்பூரில் 8600 நிறுவனங்கள், 3 லட்சம் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., காப்பீட்டில் பயனாளியாக இணைத்துள்ளன.
திருப்பூர்:
திருப்பூரில் 200 படுக்கை வசதிகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி கடந்த 2019- ல் அடிக்கல் நாட்டினார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மருத்துவமனை கட்டப்படவில்லை.
இந்தநிலையில் லகு உத்யோக் பாரதி திருப்பூர் மாவட்ட தலைவர் ரஞ்சித், தேசிய இ.எஸ்.ஐ., வாரிய உறுப்பினரும், லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளருமான சுனில் சுசிகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திருப்பூரில் 8600 நிறுவனங்கள்,3 லட்சம் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., காப்பீட்டில் பயனாளியாக இணைத்துள்ளன. ஆனால் இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாததால், தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவ தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். தொற்றுக்கு சிகிச்சை பெறுவதில் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.
எனவே திருப்பூரில் உடனடியாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ., வாரிய கூட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.