தொழில்நுட்பச் செய்திகள்
பிரீபெயிட் சலுகைகளை திடீரென நிறுத்திய ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் திடீரென நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
ஏர்டெல் நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை உயர்த்தியதோடு, அன்லிமிடெட் சலுகைகளிலும் சமீபத்தில் மாற்றம் செய்தது. தற்போது ரூ. 398, ரூ. 499 மற்றும் ரூ. 558 பிரீபெயிட் சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் நீக்கியிருக்கிறது. நீக்கப்பட்டுள்ள மூன்று சலுகைகளிலும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
மூன்று பிரீபெயிட் சலுகைகளுக்கு மாற்றாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 599 மற்றும் ரூ. 699 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகள் பற்றிய அறிவிப்பு ஏர்டெல் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாற்றம் ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
பலன்களை பொருத்தவரை ஏர்டெல் ரூ. 599 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துடன் 28 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 699 சலுகையில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷனுக்கான இலவச டிரையல் வழங்கப்படுகிறது. இத்துடன் முந்தைய சலுகையில் வழங்கப்படுவதை போன்று 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.