செய்திகள்
ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் என்ற சூரிய பிரகாஷ் (வயது 21). ரவுடியான இவர், பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடகிருஷ்ணன் தெருவில் பூமாலை கடை நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பாட்டில் மணி என்ற ரவுடிக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டு அதில் பாட்டில் மணியை அடித்ததாக இவர் மீது வண்ணாரப்பேட்டை போலீசில் வழக்கு உள்ளது.
நேற்று மாலை சூரிய பிரகாஷ் பழைய வண்ணாரப்பேட்டை மேயர் வாசுதேவன் தெருவில் பூக்கடையில் வேலை செய்யும் பெண் ஒருவர் இறந்து விட்டதால் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தனது அண்ணன் ஜெயக்குமார் (24) என்பவருடன் சென்றார். இதை அறிந்த பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து சூரிய பிரகாஷ் மற்றும் ஜெயக்குமார் இருவரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த சூரிய பிரகாஷ், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் பாட்டில் மணியின் கூட்டாளிகள் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். அவரது அண்ணன் ஜெயக்குமாருக்கு தலை, கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.