செய்திகள்
நாய்

நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ்- பாதிப்பு 3 மடங்கு அதிகரிப்பு

Published On 2021-07-22 04:54 GMT   |   Update On 2021-07-22 08:35 GMT
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் தங்களது செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடவில்லை.
சென்னை:

கெனைன் பார்வோ எனப்படும் வைரஸ் தொற்று கால்நடைகளிடம் வேகமாக பரவக்கூடியது. குறிப்பாக நாய்களை இந்த வைரஸ் தொற்று பெருமளவில் பாதிக்கும்.

இந்த வைரஸ் காற்றின் மூலமாக பரவும். அதே சமயத்தில் விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். பார்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோர்வுடன் காணப்படும். அதன் தொடர்ச்சியாக வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நாய்கள் இறக்க நேரிடும். பார்வோ வைரசால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீர், மலத்தில் இருந்து கிருமிகள் பரவி மற்ற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பார்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தினால் பார்வோ வைரஸ் தொற்று ஏற்படாமல் விலங்குகளை காக்கலாம்.


பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பார்வோ வைரஸ் தடுப்பூசிகளும், 2 தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் தங்களது செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடவில்லை.

இதன் விளைவாகவே தற்போது பார்வோ வைரஸ் நோய் தொற்று அதிகரித்து இருப்பதாக கால்நடை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News