செய்திகள்
கோப்புப்படம்

சைதாப்பேட்டையில் கொரோனா நிதி ரூ.7¼ லட்சம் கொள்ளை- போலீசார் விசாரணை

Published On 2021-05-18 01:58 GMT   |   Update On 2021-05-18 01:58 GMT
சென்னை சைதாப்பேட்டையில் ரேஷன் கடை பூட்டை உடைத்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த கொரோனா நிவாரண நிதி ரூ.7¼ லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக அரசு ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் இந்த பணம் பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் இந்த பணத்தை ரேஷன் கடைக்குள் பூட்டி வைத்துள்ளனர்.

இந்த தகவல் தெரிந்த மர்ம நபர்கள் சிலர் ரேஷன் கடை பூட்டை உடைத்து நுழைந்து, நிவாரண பணத்தை கொள்ளை அடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் இந்த திடுக்கிடும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

சைதாப்பேட்டை, காவேரி நகர், ரெயில்வே பார்டர் சாலையில் செயல்படும் 2 ரேஷன் கடைகள் (கடை எண் 24, 25) மூலமும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட தொகை போக மீதி ரூ.7.36 லட்சத்தை ஒரு கடைக்குள் (கடை எண்-24) வைத்து பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் கடையை திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரேஷன் கடை பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News