செய்திகள்
ராகுல் காந்தி

குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்- மாணவர்கள், மீனவர்களுடன் கலந்துரையாடல்

Published On 2021-03-01 05:50 GMT   |   Update On 2021-03-01 05:50 GMT
ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் இன்று பிரசாரம் செய்து வருகிறார். அவர் பள்ளி மாணவ-மாணவிகள், மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
நாகர்கோவில்:

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த அவர், அங்கு வக்கீல்கள், உப்பள தொழிலாளிகளுடன் கலந்துரையாடினார். நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.

நெல்லை பிரசாரம் முடிந்த பின்பு தென்காசி மாவட்டம் சென்ற அவர் நேற்றிரவு குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று காலை 9.20 மணிக்கு இலஞ்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடற்கரை அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல் காந்தி, கார் மூலம் கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதிக்கு வந்தார். அங்கு அவரை காண ஏராளமான மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் கூடி நின்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.

பின்னர் அவர் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்து மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, வசந்த குமாரின் மகனும், மாநில காங்கிரஸ் பொது செயலாளருமான விஜய் வசந்திற்கும் ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும், ராகுல் காந்தி காரில் நாகர்கோவில் வந்தார். டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு கூடி நின்ற தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.

பின்னர் அங்கிருந்து தக்கலை சென்றார். அங்கு காமராஜர் சிலை முன்பு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து பேசினார்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் முளகுமூட்டில் உள்ள பள்ளிக்கு செல்கிறார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து குளச்சல் பஸ்நிலையம் முன்புள்ள காமராஜர் சிலை முன்பும், பின்னர் கருங்கலில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பும் மக்களை சந்தித்து பேசுகிறார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாறக்காணியில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இந்நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவர் கேரள எல்லை பகுதியான களியக்காவிளை செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

குமரி மாவட்டம் வந்த ராகுல் காந்திக்கு வழி நெடுக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை முக்கிய சந்திப்புகளில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் குறைந்த அளவே பாதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. என்றாலும் தொண்டர்களின் உற்சாகத்திற்கு குறைவில்லை.


Tags:    

Similar News