செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமனை ஆதரித்து சீமான் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.

தமிழ்நாட்டை தலைசிறந்ததாக மாற்றி காட்டுவோம்- சீமான் பேச்சு

Published On 2021-03-28 14:16 GMT   |   Update On 2021-03-28 14:16 GMT
பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி குணம் இருப்பவர்கள் அரசியல் செய்ய முடியும் என்று வந்தவர்கள் நாங்கள் என சீமான் பேசினார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காசிராமனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி குணம் இருப்பவர்கள் அரசியல் செய்ய முடியும் என்று வந்தவர்கள் நாங்கள். நாட்டில் கூட்டுப்பண்ணை முறை உருவாக்கி விவசாயம் செய்வோம். உற்பத்தியான உணவுப்பொருட்களை அரசே விற்பனை செய்யும். ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் இலவசம்.

தமிழகத்தில் 5 தலைநகரங்களை உருவாக்கி நிர்வாகம் செய்வோம். ஒரு தலை நகரத்தில் கிடைக்கும் வசதிகள் அனைத்து தலைநகரங்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருவோம். கிராம பொருளாதார வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். எங்கள் கைகளை பலப்படுத்துங்கள். நாட்டை சிறப்பாக எப்படி நடத்துவது என்பதை உங்களுக்கு நிரூபித்து காண்பிக்கிறோம். தமிழகத்தை தலைசிறந்ததாக மாற்றி காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பூம்புகார் தொகுதி வேட்பாளர் காளியம்மாள், மண்டல செயலாளர் கலியபெருமாள், மாவட்ட செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News