செய்திகள்
சேரன்மாதேவியில் மழை பெய்த போது எடுத்த படம்.

நெல்லையில் பரவலாக மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-02-21 11:45 GMT   |   Update On 2021-02-21 11:45 GMT
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 15 நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது.

நெல்லை டவுன் பகுதியில் நேற்று காலையில் இருந்து மதியம் 2 மணி வரை வெயில் அடித்தது. 3 மணி அளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. சுமார் 15 நிமிடம் மட்டுமே இந்த மழை நீடித்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை போல் தூறிக் கொண்டு இருந்தது. இதேபோல் நெல்லையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சேரன்மாதேவி பகுதியில் நேற்று வழக்கம் போல் வெயில் அடித்தது. காலை சுமார் 9.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மதியம் 12 மணி வரை சேரன்மாதேவி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், முக்கூடல் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மதியம் வழக்கம்போல் வெயில் அடித்தது. இதே போல் சுத்தமல்லி, கொண்டாநகரம், களக்காடு பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
Tags:    

Similar News