செய்திகள்
கோப்புபடம்

குமரலிங்கத்தில் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-09-15 09:10 GMT   |   Update On 2021-09-15 09:10 GMT
குமரலிங்கத்திலிருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் உடுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் வழியாக உரல்பட்டி, சாமராய பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

குமரலிங்கத்திலிருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் உடுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் மூலமாக சென்று வருகின்றனர். சம்பவத்தன்று மாணவ-மாணவிகள் குமரலிங்கம் பஸ்நிலையத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். 

ஆனால் பஸ் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை என கூறப்படுகிறது. காலை 7.15க்கு வர வேண்டிய பஸ் 8.30 மணிக்கு கூட்ட நெரிசலுடன் வந்தது. மேலும் குமரலிங்கம் பஸ் நிலையத்தில் நிற்காமல் சென்றது.

இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆவேசம் அடைந்த பயணிகள், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு கூட முறையான பஸ் வசதி இல்லை. கூடுதல் பஸ் விட வேண்டும் என கோரிக்கை விடுத்து பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக கூடுதல் பஸ்கள் இயக்கினர். பின்னர் சிறைபிடித்த பஸ்சை பயணிகள் விடுவித்தனர்.
Tags:    

Similar News