செய்திகள்
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை பெரம்பலூர் கிளையின் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை பெரம்பலூர் கிளையின் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் வேதமாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கராசு, மண்டல நிர்வாகிகள் ஞானசேகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டில் ஆகஸ்டு வரையுள்ள 58 மாதங்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வையும், நிலுவை தொகையும் வழங்க வேண்டும். 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020-ம் ஆண்டு ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பயன்களை வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சிலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சித்தர் நன்றி கூறினார்.