கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஆஸ்பத்திரி ஊழியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
கோவை:
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் வெங்கட்சிவையா (வயது 44). இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆய்வக ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த வெங்கட்சிவையா வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.