செய்திகள்
தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 94.31 சதவீதமாக உயர்வு
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் விகிதம் 94.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. எனினும், குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்ததால் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மத்தியில் அச்சம் தணிந்தது.
பீகாரில் அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டபோதிலும், தினசரி நோய்த்தொற்று குறைவாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 1173 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 2,03,060 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 1,91,515 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைதல் விகிதம் 94.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. 10,554 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 990 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
பீகாரில் இதுவரை 90.15 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான சாம்பிள்கள் சோதனை செய்யப்படுகிறது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பிரச்சார கூட்டங்களில் பேசும்போது, அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், குணமடைதல் விகிதம் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால், கொரோனாவை கையாள்வதில் அரசு திறமையாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.