செய்திகள்
கோப்புபடம்

பெருந்துறை அருகே கழிவு பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து

Published On 2021-09-19 09:27 GMT   |   Update On 2021-09-19 09:27 GMT
பெருந்துறை அருகே கழிவு பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:

பெருந்துறை ஈரோடு ரோடு, கந்தாம்பாளையம் பிரிவு அருகே கழிவு பஞ்சுகளை அரைக்கும், பஞ்சு குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில் 3 ஷிப்டுகளாக தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் தொழிலாளர்கள் 10 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென குடோனில் வைக்கப்பட்டு இருந்த கழிவு பஞ்சுகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது.

இதைப்பார்த்ததும் தொழிலாளர்கள் உடனே எரிந்து கொண்டிருந்த பஞ்சு மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. மளமளவென பரவிய தீ அங்கு குவிக்கப்பட்டு கிடந்த கழிவு பஞ்சுவில் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றி அவர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கழிவு பஞ்சு குடோனில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. தகவல் அறிந்ததும் ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து பெருந்துறை, ஈரோடு தீயணைப்பு வீரர்கள் இணைந்து குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகே பஞ்சு குடோனில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. பஞ்சு அரவை எந்திரம் சூடாகி அதனால் ஏற்பட்ட வெப்பமே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News