செய்திகள்
உ.பி.யில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகள் கைது
உத்தர பிரதேசத்தில் பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ:
டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு இடையில் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளது. பயிர்க் கழிவுகளை எரிப்பது காற்று மாசு அதிகரிக்க காரணம் என்ற கருத்து நிலவுகிறது.
எனவே, பயிக்கழிவுகளை எரிக்க வேண்டாம் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுப்பதற்கு மாநில அரசுகள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதல் முறையாக விவசாயிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதுதவிர நூற்றுக்கணக்கான விவசாயிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுக்க தவறியதற்காக அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.