செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மதுரையில் ஒரே நாளில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-10-11 15:23 GMT   |   Update On 2021-10-11 15:23 GMT
மதுரை மாநகராட்சியும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி முதல் தவணையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், செல்போன், குக்கர், வேட்டி- சேலை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
மதுரை:

தமிழகம் முழுவதும் கடந்த 5 வாரங்களாக தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்திலும் நேற்று 5-வது வாரமாக ஆயிரத்து 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி நேற்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சியும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி முதல் தவணையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், செல்போன், குக்கர், வேட்டி- சேலை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக சிறப்பு முகாம்களில் பெரிய அளவில் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் தடுப்பூசி போட்டவர்கள் தங்களது பெயர், முகவரிகளையும் எழுதி பதிவு செய்தனர்.

நேற்று 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம், தடுப்பூசி முகாம் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக அதிக அளவில் நபர்கள் தடுப்பூசிகள் செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அதன் மூலம் நேற்று ஒரே நாளில் 87 ஆயிரத்து 711 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காதக்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு காதக்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமை தாங்கினார். முகாமை உதவி திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டார். முகாமில் துளசிதாஸ் நகர், அந்தநேரி, ஆயிரவைசிய நகர், ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் செவிலியர்கள் தடுப்பூசிகளை போட்டனர்.ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி, ஊராட்சி செயலாளர் செல்லப்பா, கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News