செய்திகள்
மதுரை அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை காமராஜர்புரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 47), டிரைசைக்கிள் தொழிலாளி. இவரது மகள் பொன்மதி. அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக மாடியில் குளிக்க சென்றார். வெகுநேரமாகியும் அவர் வராததால் அவரது தாயார் பார்க்க சென்றார். அங்கு கதவு பூட்டிய நிலையில் இருந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது பொன்மதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.