செய்திகள்
நகை பறிப்பு

துடியலூர் அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2021-04-27 09:20 GMT   |   Update On 2021-04-27 09:20 GMT
துடியலூர் அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை இடையர்பாளையம் ராமாத்தாள் நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 74). இவரது கணவர் இறந்து விட்டார்.

நேற்று மாலை வள்ளியம்மாள் மளிகை கடைக்கு செல்வதற்காக வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் வள்ளியம்மாள் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி ஒரு குறிப்பிட்ட முகவரி எங்கு இருக்கிறது என கேட்டனர்.

அதற்கு வள்ளியம்மாள், அந்த பக்கம் இருப்பதாக கூறி முகவரியைச் சொன்னார். அப்போது திடீரென வள்ளியம்மாள் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு 2 வாலிபர்களும் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மாள் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் திருடர்கள் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்கள்.

இதுபற்றி வள்ளியம்மாள் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News