செய்திகள்
பழங்கால நாணயங்கள் - பேனாக்கள் சேகரிக்கும் தந்தை, மகன்
ராமநாதபுரம் அருகே தந்தையும் மகனும் சேர்ந்து பழங்கால நாணயங்கள் மற்றும் பேனாக்களை சேகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம்அருகே உள்ளது புல்லங்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் முனியராஜ் (வயது46). விவசாயத்துடன் செங்கல் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சிறுவயது முதலே பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட முனியராஜ் அப்போது இருந்தே நாணயங்களை சேகரிக்க தொடங்கி உள்ளார். கீழே எது கிடந்தாலும் அதனை எடுத்து வந்து அதன் ஆயுட்காலம், எந்த காலத்தில் பயன்படுத்தியது என்பதை அறிவதில் ஆர்வமிக்கவராக இருந்து வந்துள்ளார்.
இதுதவிர கவிதை எழுதுவதிலும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட முனியராஜ் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் பிழையின்றி எழுத முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் பரமக்குடியில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் பிழையின்றி எழுத கற்றுக்கொண்டு அதன்மூலம் விழிப்புணர்வு வாசகம் எழுதி சான்றிதழ், பரிசு பெற்றுள்ளார். தந்தையை போன்றே இவரின் மகன் ராகுல்கவி (15) என்பவரும் நாணயங்கள் சேகரிப்பு, பேனாக்கள் சேகரிப்பு போன்ற வற்றில் ஆர்வமிக்கவராக இருந்து வருகிறார். இவர் ராமநாதபுரம் செய்யது அம்மாள்மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதுவரை 250-க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள், 15 நாடுகளின் நாணயங்கள், சுதந்திரத்திற்கு முந்தைய மகாராணி காலத்து நாணயம், முகலாய மன்னர் கால நாணயம், கட்டை பேனா உள்பட 300-க்கும் மேற்பட்ட பழங்கால பேனாக்களை சேகரித்துள்ளார்.
இதுதொடர்பான அரிய வகை புத்தகங்களையும் சேகரித்து தனது வீட்டில் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு மினி நூலகம் போன்று வைத்துள்ளனர். சிறுவன் ராகுல்கவி திருக்குறளை மனப்பாடம் செய்து சென்னையில் ஒப்புவித்து பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.