செய்திகள்
பெண் கொலை

காரியாபட்டி அருகே பணம் கொடுக்காததால் தாயை கொன்ற வாலிபர்

Published On 2021-10-14 12:48 GMT   |   Update On 2021-10-14 12:48 GMT
காரியாபட்டி அருகே பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அண்ணாநகர் மேற்கு தெருவை சேர்ந்த களஞ்சியம் (வயது 55) என்ற பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஹரிஹரன் (32) என்பவர் திருமணமாகாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் அதிகாலை 3 மணி வரை ஹரிகரன் டி.வி. பார்த்துள்ளார். இதை பார்த்த தாயார் களஞ்சியம் டி.வி.யை அணைத்து விட்டு தூங்குமாறு கூறியுள்ளார். அப்போது ஹரிஹரன் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று களஞ்சியத்திடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, “அண்ணனுக்கு மட்டும் இடத்தை விற்று பணம் கொடுத்து இருக்கிறாய், எனக்கும் பணம் கொடுக்க வேண்டும்” என்று களஞ்சியத்திடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், களஞ்சியத்தை துணியை வைத்து முகத்தில் அழுத்தி கொன்று விட்டு கம்பியை எடுத்து கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் களஞ்சியம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

களஞ்சியம் வீட்டிலிருந்து வெளியே வராததால் நேற்று சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது களஞ்சியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

பின்னர் போலீசார், களஞ்சியம் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் ஹரிஹரனை பிடித்து விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News