செய்திகள்
கைது

வல்லம் பகுதியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

Published On 2020-02-13 11:46 GMT   |   Update On 2020-02-13 11:46 GMT
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2¼ பவுன் செயின் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
வல்லம்:

தஞ்சை அருகே உள்ள ஈச்சங்கோட்டையை சேர்ந்தவர் முருகேசன் மனைவி சத்தியா (வயது29).

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சத்தியா, வி.கே.நகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சத்தியா அணிந்திருந்த 2¼ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.

இதுகுறித்து சத்தியா வல்லம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

தஞ்சை மாவட்ட எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில் வல்லம் துணை சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில் வல்லம் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபரை நிறுத்திய போது அவர் தப்பி செல்ல முயன்றார். போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் செல்லூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த நாகராஜ்(42) என்பதும், இவர் மீது கொலை, கொள்ளை உட்பட பல மாவட்டங்களில் 160 வழக்குகள் உள்ளது. இவருக்கு 4 மனைவிகள் உள்ளதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளிவந்ததும் தெரிய வந்தது. பிறகு நாகையில் தங்கி இருந்து காரைக்காலில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்து வியாபாரம் செய்துள்ளார். பின்னர் மதுரை வந்து அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு புதுக்கோட்டை வந்தபோது சத்தியாவிடம் செயினை பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2¼ பவுன் செயின் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News