அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.15 கோடி வருமானம் இழப்பு
சென்னை:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்பவில்லை.
அதற்கு மாறாக அரசு விரைவு பஸ்கள் காலை மற்றும் பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன. பஸ்கள் காலையில் புறப்பட்டு செல்வதாலும், கொரோனா பரவல் அச்சத்தாலும் அதில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருமானம் குறைந்துள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் வெளிமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் காலையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் குறைவான பயணிகளே புறப்பட்டு செல்கிறார்கள்.
அதன் காரணமாக பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று பகலில் 16 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருமானம் குறைந்துள்ளது. தினமும் ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.