செய்திகள்
கைது

வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது

Published On 2021-11-25 10:14 GMT   |   Update On 2021-11-25 10:14 GMT
இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தாக்கி பணம், நகைகளை வழிப்பறி செய்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி காளையார் கோவில் பகுதியில் பணம் வசூல்செய்து விட்டு கருப்புராஜா (28) என்பவருடன் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிவந்தார்.

அவர்கள் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டனி பட்டி அருகில் வரும்போது ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.50ஆயிரம், தங்க நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது.

இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் கண்ணன், ஸ்ரீராஜ் கண்ணன், நாகபிரபு, கார்மேக கண்ணன் உள்ளிட்டவர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிவகங்கை சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சபரிதாசன் உதவியுடன் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பரமக்குடி, முத்தாலம்மன் கோவில் படித்துரையை சேர்ந்த, முத்துராசு தூக்குதுரை (வயது24), திருப்பத்தூரை அடுத்த கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மவுன்டன் என்ற மலைச்சாமி (28), மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ஏ.கோவில்பட்டியை சேர்ந்த சத்யபிரபு (26), காளையார்கோவிலை அடுத்த கிழக்கு ஒத்தவீடுபகுதியை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இருசக்கர வாகனம், ஆயுதம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News