உள்ளூர் செய்திகள்
பழனி கொடைக்கானல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை குட்டி பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டியை கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதபரிசோதனை நடத்தப்பட்டு அதனை வனப்பகுதியில் புதைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நெய்க்காரப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் மான், சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இவை அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் போது வாகன விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இந்த சாலையில் பெரும்பாலும் கொடைக்கானலுக்கு பால், மளிகை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது.
இன்று அதிகாலை 2-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வாகன ஓட்டுனர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பழனிக்குமார் தலைமையிலான வன அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இறந்த சிறுத்தைக்குட்டிக்கு 2 வயது இருக்கும். அடையாளம் தெரியாத வாகனம் மோதி அது இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதபரிசோதனை நடத்தப்பட்டு அதனை வனப்பகுதியில் புதைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.