தமிழ்நாடு
தமிழக அரசு

முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க நேரில் வரவேண்டாம்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2022-01-11 03:40 GMT   |   Update On 2022-01-11 03:49 GMT
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக கூடுவதை தவிர்த்து, தபால் மற்றும் இணையவழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். அதுதவிர முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியை நேரில் சந்தித்தும் மனுக்களை அளிக்கின்றனர். தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வருவதால் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மனுக்களை நேரிடையாக அளிப்பதை தவிர்த்து தளர்வுகள் அறிவிக்கும் வரை தலைமை செயலக வாசலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.

மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடம் இருந்து தபால், இணையதளம், மின்னஞ்சல் மற்றும் முதல்-அமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஆகையால் கொரோனா பெருந்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக கூடுவதை தவிர்த்து, தபால் மற்றும் இணையவழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News