ஆன்மிகம்
சிவன்

நாளை பிரதோஷ விரதம் அனுஷ்டித்தால் சகல தோஷங்களும் விலகும்

Published On 2021-01-09 03:58 GMT   |   Update On 2021-01-09 03:58 GMT
பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.
பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை, மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.

இந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். 
Tags:    

Similar News