செய்திகள்
டி.ராஜா

சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்க பாஜக முன்மொழியும் - டி.ராஜா குற்றச்சாட்டு

Published On 2019-10-15 13:14 GMT   |   Update On 2019-10-15 13:14 GMT
சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என பா.ஜ.க. முன்மொழியும் என இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ம்  தேதி 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 16 இடங்களில் போட்டியிடுகிறது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் கேட்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



மகாத்மா காந்திஜியின் நூற்றைம்பதாம் ஆண்டு விழாவை நாம் அனைவரும் கொண்டாடி வரும் வேளையில், அவரது படுகொலை வழக்கில் ஒரு குற்றவாளியான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. கோருவது என்பது மிகப்பெரிய முரணாகும்.

சாவர்க்கரை தொடர்ந்து, காந்திஜியின் கொலையாளியான நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News