செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-03-13 01:36 GMT   |   Update On 2021-03-13 01:36 GMT
மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக செயல்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இடஒதுக்கீடு பிரச்சனையின் காரணமாக நடப்பு கல்வியாண்டில், எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது. இதை எதிர்த்து சித்ரா என்ற மாணவி உள்பட பலர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.புகழேந்தி, இந்த இரு படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க உத்தரவிட்டார். இந்த படிப்புகளுக்கு கடந்த காலங்களை போல மத்திய அரசின் இடஒதுக்கீடான 49.5 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர்களை சேர்ப்பதாகவும், இது தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.புகழேந்தியிடம், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் முறையிட்டார்.

அப்போது, ‘‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் முடிவை மீறி, அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுகிறது’’ என்று அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சிறப்பு அரசு பிளீடர் எஸ்.மனோகரன் ஆஜராகி வாதிட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயக்குமார், ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை’’ என்று கூறினார். பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எல்.கருணாமூர்த்தி பெயரில் தயாரிக்கப்பட்ட பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எம்.டெக். படிப்புகளுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் மாணவர்களிடம் விண்ணப்பம் பெறவில்லை. இந்த படிப்புகளுக்கான தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இன்னும் இறுதி செய்யவில்லை. இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சிப் பெறக்கூடியவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த படிப்புக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர், பொதுப்பிரிவின் கீழ் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பட்டியலை கடந்த 5-ந்தேதி மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த பட்டியல் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் அப்படியே பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், இந்த பிரிவின் கீழ் எந்த ஒரு மாணவர்களும் கல்விக்கட்டணத்தை இதுவரை செலுத்தவில்லை. பிற பிரிவின் கீழ் இரு படிப்புகளுக்கும் 11 மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், ஆன்-லைன் வாயிலாக சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட பின்னரே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்கள் சேர்க்கை குறித்து இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக பின்பற்றும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி பி.புகழேந்தி, ‘‘இந்த படிப்புகளுக்கு முந்தைய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட இடஒதுக்கீட்டு முறையைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்றவேண்டும். அதாவது மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கவேண்டும். இடஒதுக்கீட்டு முறையில் மாநில அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் செயல்படக்கூடாது’’ என்று உத்தரவிட்டார்.

அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் வக்கீல், ‘‘இந்த 10 சதவீத இடஒதுக்கீடு மாணவர்கள் இல்லாமல், புதிய தேர்ச்சி பட்டியலை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘49.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை’’ என்று கூறினார். மேலும், ‘‘மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கை முடிவுக்கு எதிராக செயல்பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் மீது சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.சரவணன், ‘‘மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மேலும் ஒரு பல்கலைக்கழகம் என்று 3 பல்கலைக்கழகங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தி மாணவர்களை சேர்த்துள்ளன’’ என்று கூறினார். அதற்கு நீதிபதி, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், இதுகுறித்து விவாதிக்க முடியாது என்று பதில் அளித்தார்.
Tags:    

Similar News