செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பில் கோவை 2-வது இடத்துக்கு வந்தது

Published On 2021-09-15 09:59 GMT   |   Update On 2021-09-15 09:59 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதத்தில் உச்சத்தை அடைந்தது. தினசரி பாதிப்பில் ஒரே நாளில் அதிகபட்சமாக 4,734 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தவிர மாநில அளவில் சென்னையை பின்னுக்கு தள்ளி கோவை மாவட்டம் முதல் இடம் பிடித்தது.

பின்னர் தொடர்ந்து கோவை மாவட்டம் கொரோனா தினசரி பாதிப்பில் முன்னிலையில் இருந்து வந்தது. இந்த மாதம் தொடக்கம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து இரட்டை இலக்க எண்ணில் வந்த போதும் கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 200-க்குமேல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மாநில அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த கோவை மாவட்டம் நேற்று இரண்டாவது இடத்திற்கு வந்தது. முதல் இடத்தில் சென்னை உள்ளது.

அதன்படி சென்னையில் நேற்று ஒரே நாளில் 212 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் நேற்று புதிதாக 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட் டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 177ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 191 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 678ஆக உள்ளது.

மேலும் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர், 85 வயது முதியவர், 75 வயது மூதாட்டி, 64 வயது முதியவர் மற்றும் 61 வயது முதியவர் என 5 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,302ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News