செய்திகள்
கோப்பு படம்.

கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்த 2 குழந்தைகளின் தந்தை- வீட்டுக்கு தீ வைப்பால் பதட்டம்

Published On 2020-09-13 06:45 GMT   |   Update On 2020-09-13 06:45 GMT
திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியுடன் 2 குழந்தைகளின் தந்தை ஓட்டம் பிடித்ததால் அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி செட்டியபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கருப்பசாமி (வயது 36). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கருப்பசாமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. கருப்பசாமி மற்றும் கல்லூரி மாணவி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அறிந்து இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் கருப்பசாமி வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். மேலும் மாணவியின் வீடும் சேதப்படுத்தப்பட்டது. பைனான்சியர் மற்றும் கல்லூரி மாணவி இரு வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்தது.

சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல், சின்னாளப்பட்டி போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News