செய்திகள்

அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2018-11-08 09:06 GMT   |   Update On 2018-11-08 09:06 GMT
அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். #MinisterKCVeeramani
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வேலூரில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தோம். 2010-ம் ஆண்டு இந்த நிலத்தை சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வாங்கினர். அந்த நிலத்தை ரூ.225 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர். அந்த நிலத்தை மேம்படுத்தியதற்காக ரூ.65 கோடி எங்களுக்கு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், பேசியபடி அந்த தொகையை வழங்காமல், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியுடன், சட்டவிரோதமாக எங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்காக அமைச்சர் வீரமணிக்கு ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால், எங்களை மிரட்டுகின்றனர்.

இதுகுறித்து சட்டசபை செயலாளர், அரசு கொறடா, தமிழக டி.ஜிபி., ஆகியோரிடம் அமைச்சர் உள்ளிட்டோர் குறித்து புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, நாங்கள் கொடுத்த புகாரை, முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க சட்டப்பேரவை செயலாளர், அரசு கொறடா ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். அந்த புகாரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்ற முதல்-அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி விசாரித்தார். பின்னர், மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார். #MinisterKCVeeramani
Tags:    

Similar News