செய்திகள்
சுசீந்திரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்தார்.

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- அமித்ஷா

Published On 2021-03-07 07:35 GMT   |   Update On 2021-03-07 07:35 GMT
சுசீந்திரம் நகர மக்களிடம் “வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம் செய்தார்.
நாகர்கோவில்:

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.

இதற்காக அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்தார். நாகர்கோவில் மறவன் குடியிருப்பு போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கிய அவரை பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்பு மத்திய மந்திரி அமித்ஷா அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு 20 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து சுசீந்திரம் நகர மக்களிடம் ‘‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அப்போது அங்கு 11 வீடுகளில் ‘‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி, துண்டு பிரசுரங்களையும் வாக்காளர்களுக்கு வழங்கி பிரசாரம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இன்று பிரசாரம் தொடங்கி உள்ளோம். இதுபோல சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறோம்.


சுசீந்திரத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று பாரதிய ஜனதாவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வினியோகித்தோம். கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதை உறுதி செய்யுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சிகளின் கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள நீலவேணி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து இந்துகல்லூரி முதல் வேப்பமூடு சந்திப்பு வரை சுமார் 1½ கிலோமீட்டர் தூரம் ‘‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’’ என்ற ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். பிரசார முடிவில் வேப்ப மூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய மந்திரி அமித்ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து வடசேரியில் உள்ள ஓட்டலுக்கு செல்லும் அவர், அங்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

அதனை முடித்துக் கொண்டு மதியம் 2 மணியளவில் மறவன்குடியிருப்பு போலீஸ் ஆயுதப்படை மைதானத்துக்கு வரும் மத்திய மந்திரி அமித்ஷா, ஹெலிகாப்டரில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

மத்திய மந்திரி அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து சுசீந்திரம் கோவில் செல்லும் சாலையில் இருபுறமும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் அமித்ஷா ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளிமாவட்ட போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமித்ஷா சென்ற சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

வேப்பமூடு பகுதியில் அமித்ஷாவை பாரதிய ஜனதா தொண்டர்கள் செண்டைமேளம் முழங்க வரவேற்றனர்.
Tags:    

Similar News