செய்திகள்
கொலை

பாளை தந்தை-மகன் கொலையில் 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2021-10-13 10:33 GMT   |   Update On 2021-10-13 10:33 GMT
பாளை தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாளையை அடுத்த கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை என்ற பீர்(வயது 55). மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் நொச்சிகுளம் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் அய்யாத் துரையின் மகன் கோதர் என்ற சரவணன்(22) நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோதர் சரவணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு முன்னர் பீரும் இருந்ததால் அவரையும் மர்மநபர்கள் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட கோதர் சரவணன், அய்யாத்துரை ஆகியோருக்கும், நொச்சிகுளத்தை சேர்ந்த சிவன், கண்ணன் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் கோதர் சரவணன் நொச்சிகுளம் பகுதிக்கு சென்று தனது தந்தையை அவர்கள் 2 பேரும் தான் கொலை செய்தார்கள் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆத்திரத்தில் அவர்கள் 2 பேரும் அய்யாத்துரை வீட்டிற்குள் புகுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த கோதர் சரவணனை சரமாரி வெட்டிக்கொலை செய்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News