செய்திகள்
ராமதாஸ்

முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-04-07 06:51 GMT   |   Update On 2021-04-07 06:51 GMT
பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் 3,645 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்நாட்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 450 என்ற அளவுக்கு குறைந்திருந்தது. அதனால் ஏப்ரல் மாதத்தில் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலையாகிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தான் கொரோனா பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவு 648 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு தினசரி கொரோனா பரவல் 562- லிருந்து 3645 ஆக அதிகரிக்க 56 நாட்கள் ஆயின. ஆனால், இப்போது 30 நாட்களில் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக் கூட கடைபிடிக்காதது தான் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு காரணம் ஆகும்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட எவரும் முக கவசம் அணியாதது தான் கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததற்கு காரணம் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகளும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.

கொரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டின் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தான் அரசின் முதற்கடமையாக இருக்க வேண்டும். ஒருபுறம் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி, மறுபுறம் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைபிடிப்பதன் மூலம் நோய்ப்பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவது என்ற இருமுனை அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.


பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பிறகும் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அபராதம் விதிப்பதோ, பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோ தண்டிப்பதற்காக அல்ல. கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து தங்களையும் காப்பாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகத் தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். அரசு, மக்கள் என அனைவரும் கைகோர்த்து கொரோனா என்ற பெருந்தீமையை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News