வழிபாடு
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ‘மக்கள்மார் சந்திப்பு’ நிகழ்ச்சி இன்று நடக்கிறது

Published On 2021-12-13 07:35 GMT   |   Update On 2021-12-13 07:35 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 3-ம் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு ‘மக்கள்மார் சந்திப்பு’ நிகழ்ச்சி நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

3-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) புஷ்பக விமான வாகனத்தில் சாமி வீதிஉலா காட்சி நடைபெறும். இரவு 10 மணிக்கு சாமி கற்பக விருட்ச வாகனத்தில் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வடக்குத் தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, குமாரகோவில் சுப்பிரமணியசாமி ஆகிய மூவரும் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவினை காண வருகின்றனர். உமாமகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை விநாயகரும், சுப்பிரமணியரும் 3 முறை சுற்றி வலம் வந்து ஆசி பெறுவார்கள்.

பின்பு இருபுறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். அப்போது தீபாராதனை நடைபெறும். இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது. இந்த தரிசனத்தை ‘மக்கள் மார் சந்திப்பு’ என்றும் ‘மக்கள் மார்சுற்று’ என்றும் கூறுவர். இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர்.

பின்னர் 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும் தாய், தந்தையரின் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதி உலா வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்கம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News