செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

மேற்குவங்காளத்தில் 3வது கட்ட தேர்தல்- 31 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

Published On 2021-04-05 06:33 GMT   |   Update On 2021-04-05 06:33 GMT
மேற்குவங்காளத்தில் மொத்தம் 8 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் நாளையுடன் 3 கட்ட தேர்தல்கள் முடிகின்றன.
கொல்கத்தா:

5 மாநில சட்டசபை தேர்தலில் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இவற்றுடன் அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் 3-வது கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

மேற்குவங்காள மாநிலத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 294. அதில் கடந்த 27-ந் தேதி, 1-ந் தேதி ஆகிய நாட்களில் தலா 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.



முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் கடந்த 1-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இங்கு 3-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகின்றது. அப்போது 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறன. ஏற்கனவே முதல் 2 கட்ட தேர்தலும், தென்மேற்கு பகுதியில் உள்ள தொகுதிகளில் நடந்தன.

நாளை ஹவுரா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. சபாநாயகர் பீமன் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் சவுகத் மொல்லா ஆகிய தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாளை மொத்தம் 78 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள். இதற்காக 10,871 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 31 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 13 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், இதர கட்சிகள் மற்ற இடங்களிலும் போட்டியிடுகின்றன.

2-வது கட்ட தேர்தல் நடந்தபோது பல இடங்களில் வன்முறை வெடித்தது. மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் கலவரம் நடந்தது.

எனவே நாளையும் வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்காளத்தில் மொத்தம் 8 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் நாளையுடன் 3 கட்ட தேர்தல்கள் முடிகின்றன. அடுத்ததாக 10-ந் தேதி 44 தொகுதிகளுக்கும், 17-ந் தேதி 45 தொகுதிகளுக்கும், 22-ந் தேதி 43 தொகுதிகளுக்கும், 29-ந் தேதி 36 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

29-ந் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். அன்று 35 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். அத்துடன் மேற்கு வங்காள தேர்தல் முடிவுக்கு வருகிறது.

மற்ற மாநிலங்களுடன் சேர்த்து அங்கும் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Tags:    

Similar News