செய்திகள்
விபத்து

அரசு பஸ் மோதி புதுக்கோட்டை காய்கறி வியாபாரி பலி

Published On 2021-01-22 22:08 GMT   |   Update On 2021-01-22 22:08 GMT
திருச்சியில் அரசு பஸ் மோதி புதுக்கோட்டையை சேர்ந்த காய்கறி வியாபாரி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:

திருச்சியில் அரசு பஸ் மோதி புதுக்கோட்டையை சேர்ந்த காய்கறி வியாபாரி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). மற்றொருவர் முருகன் (45). இருவரும் குளத்தூர் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இருவரும் திருச்சி வந்து, மொத்தமாக காய்கறிகள் கொள்முதல் செய்து, குளத்தூரில் வியாபாரம் செய்வது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை குளத்தூரிலிருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்ட, பின் இருக்கையில் முருகேசன் உட்கார்ந்திருந்தார். திருச்சி தலைமை தபால் அலுவலகம் பகுதி சிக்னலில் வலதுபுறம் மோட்டார் சைக்கிளை முருகன் திருப்பி உள்ளார். அப்போது, அவ்வழியே திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி இருவரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது பஸ் சக்கரம் முருகேசன் மீது ஏறி இறங்கியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். முருகன் படுகாயத்துடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பாிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News