உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-01-12 11:51 GMT   |   Update On 2022-01-12 11:51 GMT
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த  7-ந் தேதி தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு 103 ஆக பதிவானது. அதைத்தொடர்ந்து  8-ந் தேதி 131, 9-ந் தேதி 149, 10-ந் தேதி 123 ஆக பதிவாகி இருந்தது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியலில் கடந்த 5 மாதமாக இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால்  பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 81 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது.   

கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை  712 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 776 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று  உறுதியான 242 தினசரி பாதிப்பில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

நேற்று பாதிப்பு ஏற்பட்ட 140 பேருக்கும் லேசான அறிகுறிகளே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

இது குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் இவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 

மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. மாநகராட்சியில் பெரும்பாலும்  தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
 
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு என்று 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் இருப்பார்கள். அவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்கள் சிகிச்சை பெற நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும்  அவர்களுக்கு மருத்துவம் தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். அவர் களுக்கு மருத்துவம் சார்ந்த உதவி தேவைப்பட்டால் கட்டுப்பாடு அறை எண்கள் கொடுக்கப்படும். அந்த கட்டுப்பாட்டு அறையை அவர்கள் தொடர்பு கொண்டு தேவையான உதவிபெறலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News