செய்திகள்
பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள்- சபாநாயகர் அறிவிப்பு
தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், துறை வாரியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெளியேறினர்.
பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்தும், சபை அலுவல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார்.
சித்தவைத்தியர் சிவராஜ் மறைவுக்கு 25ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள், உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
25 மற்றும் 26 ஆகிய நாட்களில் பட்ஜெட் மீதான விவாதமும், 27ம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரையும் இடம்பெறும் என சபாநாயகர் கூறினார்.