செய்திகள்
கூட்டணி உறுதியான நிலையில் அமித்ஷாவுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு
அதிமுக, பாஜக கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் அமித்ஷாவை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அமித்ஷா கலந்துகொண்டார். இந்த அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின்போது 2021-ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பை அமித்ஷா மற்றும் முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு உள்துறை மந்திரி அமித்ஷா தான் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கு சென்றார். அமித்ஷா ஓட்டலுக்கு சென்ற சில நிமிடங்களில் அதே ஓட்டலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்றுள்ளனர். அவர்களுடன் முக்கிய அமைச்சர்களும் சென்றுள்ளனர்.
அங்கு அமித்ஷாவை முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
தேர்தல் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தேர்தல் பிரசார வியூகம், தேர்தல் தொகுதி பங்கீடு உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித்ஷாவுடனான இந்த சந்திப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.