செய்திகள்
பல்லடத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் சதீசை கைது செய்த அனைத்து மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் செல்போன் தொடர்பு மூலம் பழகிய வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்திச் சென்றுவிட்டார். இந்தநிலையில் சிறுமி காணாமல் போனது குறித்து பல்லடம் போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடிவந்தனர். இந்த நிலையில் சிறுமி வெளியூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியை தேடி சென்றபோது, சிறுமியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் போலீசார் இருவரையும் அழைத்து வந்து பல்லடம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ் (வயது 20) என்பவர் சிறுமியிடம் செல்போன் மூலம் ஏற்பட்ட தொடர்பில், ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் சதீசை கைது செய்த, அனைத்து மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.