செய்திகள்
கைது

உத்தமபாளையம் அருகே வியாபாரி கொலை- பிரியாணி கடை உரிமையாளர் கைது

Published On 2021-06-26 12:12 GMT   |   Update On 2021-06-26 12:12 GMT
உத்தமபாளையம் அருகே வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது சித்திக் (வயது 42). இவர் அங்குள்ள மெயின் பஜார் பகுதியில் ரெடிமேடு கடை நடத்திவந்தார். இவரது கடை அருகே அதே ஊரை சேர்ந்த முனீஸ்வரன் (32) பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இவர்கள் 2 பேருக்கும் அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றை ஒத்திக்கு வாங்குவதில் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது சித்திக் அவரது ரெடிமேடு கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த முனீஸ்வரனுக்கும், முகமது சித்திக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு இடையே தகராறு முற்றி இருவரும் திடீரென கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது முனீஸ்வரன் ஆத்திரத்தில் முகமது சித்திக்கை அடித்து கீழே தள்ளி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சித்திக் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News