செய்திகள்
கோவையில் ஒரே நாளில் 17 ரவுடிகள்- 32 கஞ்சா வியாபாரிகள் கைது
போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் கோவையில் ஒரே நாளில் 17 ரவுடிகள், 32 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவை:
கோவை மாநகர பகுதிகளில் ரவுடிகள் மற்றும் கஞ்சா வியாபாரிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாநகர போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. எனவே ரவுடிகள், கஞ்சா வியாபாரிகளை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மாநகரில் 15 போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படையினர் ரவுடிகள் மற்றும் கஞ்சா வியாபாரிகளை பிடிக்க நேற்று முன்தினம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தீவிர வேட்டையில் மாநகர் முழுவதும் ஒரே நாளில் 49 பேரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அவர்களில் 17 பேர் ரவுடிகள் என்பதும், 32 பேர் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த திடீர் அதிரடி வேட்டையால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.