ஆன்மிகம்
கொடியேற்றம் நடந்ததையும், சாரங்கபாணி பெருமாள், உபநாச்சியார்களுடன் அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

சாரங்கபாணி கோவில் தை தேரோட்ட திருவிழா தொடங்கியது

Published On 2021-01-07 04:02 GMT   |   Update On 2021-01-07 04:02 GMT
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். 7 ஆழ்வார்களால் நாலாயிர திவ்யபிரபந்தம் அருளப்பெற்ற தலமாகவும் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் தை தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான தை தேரோட்ட திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகளும், சேனை முதல்வர் புறப்பாடும் நடந்தது. இதையடுத்து நேற்று கருடக்கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. அப்போது உற்சவர் ஆராவமுதன் உப நாச்சியார்களுடன் ராஜ அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொடியேற்றத்தை தொடர்ந்து தேசிக பிரபந்த ஆழ்வார், சாற்றுமுறை ஆச்சார்யர்கள் நூற்றுக்கால் மண்டபம் எழுந்தருளினர். விழாவையொட்டி தினமும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடைபெற உள்ளது. 13-ந் தேதி வெண்ணெய்த்தாழி சேவை நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி தை பொங்கல் அன்று நடக்கிறது. கொரோனா வைரஸ் நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது. இதில் சாரங்கபாணி உப நாச்சியார்களுடன் வெள்ளி ரதத்தில் அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News