லைஃப்ஸ்டைல்
உதட்டின் வறட்சி மற்றும் வெடிப்பை சரி செய்யும் வழிகள்

உதட்டின் வறட்சி மற்றும் வெடிப்பை சரி செய்யும் வழிகள்

Published On 2019-10-11 03:23 GMT   |   Update On 2019-10-11 03:23 GMT
பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதற்கு காலநிலை மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
தற்போதைய காலநிலை மிகவும் மோசமாக மாறும் போது பலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் மற்றும் கடுமையான வறட்சி ஏற்படும். உதட்டில் வெடிப்புக்கள் இருந்தால், எதையும் சாப்பிட முடியாது, குடிக்க முடியாது, ஏன் சிரிக்க கூட முடியாது. அவர்கள் அப்படி செலவு செய்து அழகை மேம்படுத்தினாலும், உதட்டில் ஏற்படும் வெடிப்பு அவர்களின் அழகை பாதிக்கிறது. உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதற்கு காலநிலை மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் உள்ளன.

அவை வைட்டமின் பி குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு, உடல் வறட்சி, அதிகப்படியான சூரியக்கதிர்களின் தாக்கம், இரசாயன பொருட்களின் உபயோகம் போன்றவைகளாலும் உதடுகளில் வறட்சி உண்டாகி வெடிப்புக்கள் ஏற்படலாம். இங்கு உதட்டு வெடிப்பை சரி செய்யும் வழிகளை பார்க்கலாம்.

* சிறிது சர்க்கரையுடன், சில துளி ஆலிவ் ஆயில் கலந்து, உதட்டில் தடவி ஐந்து நிமிடம் மென்மையாக தேய்த்து, நீரில் கழுவ வேண்டும். பின் உதட்டில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், உதட்டில் இருந்த இறந்த செல்கள் வெளியேறி, உதடு அழகாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

* உதடுகளில் வறட்சி அதிகம் ஏற்படுவது போல் இருந்தால், தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தேன் தடவுங்கள். இதனால் உதட்டின் ஈரப்பசை அதிகரிப்பதோடு, உதட்டில் இருக்கும் கருமை நீங்கி, உதடு அழகாகும்.

* தூங்கும் முன் சிறிது நெய்யை உதட்டில் தடவி வந்தால், நெய்யும் தேனைப் போன்ற நல்லபலனைத் தரும். இதனால் வறட்சி மற்றும் வெடிப்புகள் நீங்குவதோடு மென்மையான உதட்டையும் பெறலாம்.

* க்ரீன் டீ தயாரித்த பின், அந்த பை அல்லது அதன் இலைகளைத் தூக்கிப் போடாமல், அதனைக் கொண்டு சில நிமிடங்கள் உதட்டை மசாஜ் செய்தால், உதட்டில் ஈரப்பசை அதிகரித்து, வெடிப்புகள் மறையும்.

* தேங்காய் எண்ணெய் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். மேலும் இது ஆன்டி-பாக்டீரியல் தன்மைகளையும் உள்ளடக்கியது. அத்தகைய சுத்தமான தேங்காய் எண்ணெயை ஒருவர் தினமும் பலமுறை உதட்டில் தடவி வந்தால், உதட்டின் ஆரோக்கியம் மற்றும் அழகு மேம்படும்.

* ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன், உதடு மற்றும் முகத்தில் தடவி வந்தால், ஐந்தே நாட்களில் முகம் மற்றும் உதடு பிரச்சனைகளின்றி பொலிவோடும் அழகாகவும் இருப்பதைக் காணலாம்.

* வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அத்தகைய வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் உதடு வறட்சி மற்றும் வெடிப்பு இருக்கும் போது செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

* சிறிது தேன் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, உதட்டில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டில் உள்ள கருமை மற்றும் வறட்சி நீங்கி, உதடுகள் அழகாக இருக்கும்.
Tags:    

Similar News