செய்திகள்
கைது

நடத்தையில் சந்தேகம்- தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மகன் கைது

Published On 2019-12-03 10:06 GMT   |   Update On 2019-12-03 10:06 GMT
திண்டுக்கல்லில் நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நாகல்நகர் குயவர் தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி உமாமகேஸ்வரி (வயது38). இவர்களுக்கு ஆனந்த் (19) என்ற மகனும் சுவேதா (18) என்ற மகளும் உள்ளனர். கண்ணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் உமாமகேஸ்வரி, தனது தாய் தனம் வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை வளர்த்து வந்தார். ஆனந்த் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது வீட்டிற்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும்போது அவரது தாயின் நடத்தையை பற்றி சிலர் தவறாக கூறி வந்துள்ளனர். இதனால் அடிக்கடி ஆனந்துக்கும், உமாமகேஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று நண்பர்களுடன் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்த மகனை தாய் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் கத்தியால் தனது தாய் என்றும் பாராமல் கழுத்து, கன்னம், முதுகு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நகர் தெற்கு போலீசார் ஆனந்தை தேடி வந்தனர். ஆனால் அவர் தானாகவே போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசாரிடம் அவர் தெரிவிக்கையில், எனது தாயின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்திவிட்டேன் என்றார். இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News