லைஃப்ஸ்டைல்
கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

Published On 2021-05-26 08:33 GMT   |   Update On 2021-05-26 08:33 GMT
கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் நடுத்தர வயதுள்ளவர்களே அதிகளவில் பாதித்து வருகிறது. முதல் அலையின்போது இணைநோய் உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை நோய் இல்லாதவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 18 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். மே 9ஆம் தேதி நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானவர்களில் 39 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். அதுபோன்று, நேற்று உயிரிழந்த 298 பேரில், 78 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.

இந்நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களில் கொரோனாவுக்கு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 31-40 வயதுள்ள 37 சதவிகித்தினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசின் தகவலின்படி, முதல் அலையின்போது 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு விகிதம் 31 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 32 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா முதல் அலையுடன், இரண்டாம் அலையை ஒப்பீடும்போது, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது சற்று உயர்ந்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி வெளியே செல்வது அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும்போது அலட்சியமாக முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செல்வது, மற்றும் நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும்தான், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவ காரணம்” என்கிறார்.
Tags:    

Similar News